tamilnadu

img

உ.பி.யில் பழங்குடியினர் 10 பேர் படுகொலை

புதுதில்லி, ஜூலை 20- உத்தரப்பிரதேச மாநிலத்தில், நிலமற்ற பழங்குடியினர் பத்து பேர், நிலப்பறிக் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப் பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் உம்பா கிராமத்தில் நிலப்பறிப்புச் செய்திடும் கிரிமினல் மாபியா கும்பல், மூன்று பெண்கள் உட்பட பத்து பழங்குடியினரைப் படுகொலை செய்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. பழங்குடியினர் மேற்படி நிலங்களைக் கடந்த எழுபது ஆண்டுகளாக உழுது பயிரிட்டு வருகின்றார்கள். எனினும் எந்த அரசாங்கமும் அவர்களுக்குப் பட்டா அளித்திட வில்லை. அது அவர்களின் உரிமையாகும்.   யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், நிலப்பறி மாபியா கிரிமினல் கும்பலால் பழங்குடியினர் நிலத்தில் உழுவதை  நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று அச்சுறுத்தப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக பழங்குடியினர் ஆட்சி நிர்வாகத்தினரிடம் முறையிட்டும் எவ்விதப் பயனுமில்லை. ஆதித்யநாத் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நிலங்களை பிரதான் என்பவரால் “வாங்கப்பட்டதாக”க் கூறி, பழங்குடியினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் கொஞ்சமும் முன்வரவில்லை. மாறாக, அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழு வினர் மேற்படி கிராமத்திற்குச் சென்று, பாதிப்புக்கு உள்ளானவர்களைச் சந்தித்தனர். எவரும் சென்று அவர்களை பார்ப்பதற்குக்கூட உ.பி. அரசாங்கம் தடை விதித்திருந்தது. அதனைத் தகர்த்தெறிந்துதான் தூதுக்குழுவினர் அவர்களைச் சென்று பார்த்தனர்.

குண்டர் படை சுட்டுக் கொன்றது

மத்தியக்குழு உறுப்பினர் ஹீராலால் யாதவ் தலைமையில் சென்ற ஆறு பேர் அடங்கிய தூதுக்குழுவினரிடம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் கூறிய விவரங்கள் மிகவும் கொடூரமானவைகளாகும். யாக்யா தத் என்பவன் தலைமையில் டிரக்கில் வந்த குண்டர் படை ஒன்று நிலத்தில் உழுதுகொண்டிருந்த விவசாயிகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது.
 

மாநில அரசே பொறுப்பு

நிலங்களுக்குப் பட்டா கொடுங்கள் என்று பழங்குடிக் குடும்பத்தினர் பலமுறை ஆட்சியாளர்களைக் கேட்டும் அவர்கள் தர  முன்வரவில்லை. முன்பு ஒரு தடவை மேற்படி நிலங்கள் 1955இல் சின்கா என்பவன் தலைமை யில் இயங்கிய நிலப்பிரபுக்களின் குண்டர் படை, அந்நிலங்களைக் கைப்பற்றியது. அப்போது ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டு, ஆதர்ஷ் அறக்கட்டளை எனப் பெயரிடப்பட்டு, அதன்கீழ் பழங்குடியினர் விவசாயம் செய்து வந்தார்கள். ஒவ்வோராண்டும் நில வாரமும் அளித்து வந்தார்கள். பின்னர் 2017இல் அந்த நிலங்கள் யாக்யா தத் என்பவனுக்கு ஆட்சியாளர்களின் உதவி யுடன் விற்கப்பட்டது. பழங்குடியினருக்கு பட்டா  வழங்காததற்கும், அவர்களை நில மாபியா கும்ப லிடமிருந்து பாதுகாக்காததற்கும் அவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியது தற்போதைய மாநில அரசாங்கமேயாகும். படுகாயங்களுடன் இரு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வந்தவர்களை தூதுக்குழு வினர் சந்தித்தார்கள்.

உடன் பட்டா வழங்குக!

கடந்த எழுபதாண்டு காலமாக அந்நிலங்களைப் பண்படுத்தி, விவசாயம் செய்து வரும், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நிலப்பட்டாக்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. மேலும், கிரிமினல்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின ரின் குடும்பத்தினருக்கும், காயமுற்றிருக்கிற வர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும், பாதிப்புக்கு ஆளாகி நிர்க்கதி யாய் நிற்கிறவர்கள் அனைவருக்கும் இலவச ரேசன் அட்டைகள் வழங்கிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.  (ந.நி.)